Publish Date: Fri, 08 Aug 2008 (19:37 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (19:36 IST)
வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்தை 51 மாவட்டங்களில் இந்த ஆண்டும் முன்னோடித் திட்டமாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்தின் (என்பிஜிஏ) கீழ் 11-19 வயதுக்கு உட்பட்ட ஊட்டச்சத்து இல்லாத எல்லா பெண்களுக்கும் சத்தான உணவும் இலவச மருத்துவ பரிசோதனை வசதியும் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 30 கிலோ எடை கொண்ட 15 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள், 35 கிலோ எடை கொண்ட 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என இரண்டு நிலையில் வளர் இளம் பெண்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவர்களது பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு ஒரு பயனாளிக்கு 6 கிலோ இலவச உணவு தானியங்கள், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பற்றி, பயனாளிகள் மற்றும் குடும்பத்தினருக்கு கல்வி அளித்தல், குறிப்பிட்ட கால இடைவெளியில் இலவச மருத்துவ பரிசோதனை, தேவைப்பட்டால் உரிய சிகிச்சைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தை நாட்டின் 51 மாவட்டங்களில் 2008-09-ம் ஆண்டும் முன்னோடித் திட்டம் என்ற வகையில் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு இதற்கு இன்று ஒப்புதல் வழங்கியது.
ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்து இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கான நிதியுதவி முழுவதையும் மத்திய அரசே ஏற்கும். 2008-09-ம் ஆண்டுக்காக இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.162.77 கோடியில் இருந்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு உரிய நிதியை வழங்கவும் அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Webdunia
Publish Date: Fri, 08 Aug 2008 (19:37 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (19:36 IST)