Publish Date: Fri, 08 Aug 2008 (13:40 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (13:40 IST)
புனித அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள புகழ்பெற்ற பனி லிங்கத்தை தரிசித்து வணங்குவதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
யாத்திரிகைக் காலம் முடிவை எட்டியுள்ளதாலும், அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களாலும் அமர்நாத் வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து இன்று மேலும் 76 பக்தர்கள் புனித அமர்நாத் நோக்கிப் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
3 பெண்கள், 38 சாதுக்கள் உள்ளிட்ட இந்த 76 சாதுக்களும் 2 பேருந்துகளில் இன்று அதிகாலை புனித அமர்நாத் புறப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மிகுந்த இப்பகுதியில் பக்தர்களுக்கு, மத்திய கூடுதல் காவற்படையினர் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.