Publish Date: Wed, 30 Jul 2008 (18:34 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (18:33 IST)
நுகர்வோருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என மத்திய விவசாயம், நுகர்வோர் நலன், பொது வினியோகத் துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.
புது தில்லியில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் 24-வது கூட்டத்தை அவர் இன்று தொடங்கி வைத்து பேசுகையில், "நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த திருத்தங்கள் நுகர்வோருக்கு மிகுந்த பயனளிப்பதாகவும் சிறந்த செயலாற்றலுடன் கூடியதாகவும் இருக்கும்.
நாட்டில் நுகர்வோர் அமைப்புகளை ஏற்படுத்த திட்ட கமிஷனும் நிதி அமைச்சகமும் பட்ஜெட்டில் அதிக அளவு நிதியை ஒதுக்குகின்றன. நுகர்வோர் அமைப்புகளை கணினிமயமாக்குதல், நெட்வார்க் மூலம் இணைக்கும் பணிகளை தேசிய தகவல் மையம் (என்ஐசி) தீவிரமாக செய்து வருகிறது.
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் ஜெர்மனி அரசுடன் இணைந்து ஒரு திட்டம் நிறைவேற்றப்படுகிறது. ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இது முதலில் அறிமுகப்படுத்தப்படும்" என்று அமைச்சர் சரத்பவார் கூறினார்.
Webdunia
Publish Date: Wed, 30 Jul 2008 (18:34 IST)
Updated Date: Wed, 30 Jul 2008 (18:33 IST)