Publish Date: Mon, 28 Jul 2008 (20:59 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (20:59 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டியுள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய பாதுகாப்பு அரண்களின் மீது பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Control - LoC) உள்ள நவ்காம் பகுதியில் கய்யான் என்ற இடத்திலுள்ள எல்லைப் பாதுகாப்பு அரண்களின் மீது இன்று பிற்பகல் பாகிஸ்தான் இராணுவத்தினர் தொடர்ந்து சுட்டதாகவும், அதில் இந்திய இராணுவத்தின் தேசிய துப்பாக்கிப் படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் குண்டடிப்பட்டு பலியாகி அருகிலிருந்த பள்ளத்தாக்கில் விழுந்ததாகவும் இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலையடுத்து பாகிஸ்தான் எல்லைப்பகுதியை நோக்கி இந்தியப் படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ள இந்திய இராணுவம், கொல்லப்பட்ட சிப்பாயின் உடலை மீட்டெடுக்க சுடுதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் தரப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.