Publish Date: Sun, 27 Jul 2008 (13:20 IST)
Updated Date: Sun, 27 Jul 2008 (13:20 IST)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது!
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதியான மணி நகர், மக்கள் நெருக்கம் மிகுந்த பாபு நகர், டைமண்ட் மார்க்கெட், இஷான்பூர், நரோதா, சரங்பூர், ராஜ்பூர், ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணி முதல் சுமார் இரவு 8 மணிக்குள் 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
காவல்துறை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் இன்று காலை யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த தவலின்படி, இதுவரை 37 பேர் இறந்துள்ளதாகவும், 132 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்தது.
அதன்பிறகு கிடைத்த தகவலின்படி, சிகிச்சை பலனின்றி மேலும் 6 பேர் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன. இதனையடுத்து பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
வெடிக்காத சில குண்டுகள் மணிநகர் ஹட்கேஸ்வர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பின்னர் அவைகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.