Publish Date: Thu, 24 Jul 2008 (18:48 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (18:47 IST)
தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், கிராமப்புறங்களில் உள்ள தொலைபேசிக்கான உரிமம் (license) கட்டணத்தை தள்ளுபடி செய்ய மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத் தொடர்பு ஆணையத்தின் கூட்டம் சமீபத்தில் புது தில்லியில் நடந்தது. நாட்டில் தொலைபேசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிகள் பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.
கிராமப் பகுதிகளில் தொலைபேசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, கிராமப்பகுதிகளில் உள்ள தொலைபேசி மீதான உரிம கட்டணத்தை முழுவதும் தள்ளுபடி செய்வதாக இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
நகர்ப் பகுதிகளைப் போலவே கிராமங்களும் தொலைத் தொடர்பு வசதிகளை அதிகளவில் பெறச் செய்வது மற்றும் அகண்ட அலைவரிசை இணைப்புகளை கிராமங்களில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் நாடு முழுவதும் இ-நிர்வாகம் திட்டத்தை விரைவுபடுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு வசதிகளை குறைந்த கட்டணத்தில் வழங்க கிராமங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக 'பொது சேவை நிதி' தொடங்கப்பட்டது.
95 சதவீதத்துக்கும் அதிகமான கிராமப் பகுதிகளில் ஏற்கனவே தொலைபேசி வசதி வழங்கி வரும் நிறுவனங்களின் 'அட்ஜஸ்டட் கிரவுண்ட்' வருமானத்தில் 5 சதவீதத் தொகை வரியாக வசூலிக்கப்பட்டு மேற்கண்ட நிதியில் சேர்க்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் சேவை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இதை 3 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி கிராமங்களில் சராசரியாக 100-ல் 8 பேரிடம் மட்டுமே தொலைபேசி உள்ளது. கிராமங்களில் கூடுதலாக 20 கோடி இணைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதிக்குள் 100-ல் 25 பேரிடமாவது தொலைபேசி இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 24 Jul 2008 (18:48 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (18:47 IST)