Publish Date: Sat, 19 Jul 2008 (14:47 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (14:47 IST)
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க கடற்படையை கண்டித்து தி.மு.க. இன்று நடத்திய உண்ணாவிரதத்தின் எதிரொலியாக, டெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சிறிலங்க கடற்படையினரை கண்டித்து, இன்று தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் எதிரொலியாக, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சிறிலங்க தூதரை அழைத்து பேசிய மத்திய அரசு, சிறிலங்க கடற்படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.
மேலும், தமிழக மீனவர்கள் விஷயத்தில் மனிதாபிமான முறையில் சிறிலங்க கடற்படையினர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவரிடம் மத்திய அரசு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், தமிழக மீனவர்கள் பிரச்சனையை மத்திய அரசு நேரடியாக சிறிலங்க உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.