Publish Date: Tue, 15 Jul 2008 (17:24 IST)
Updated Date: Tue, 15 Jul 2008 (17:24 IST)
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடும் என்று வெளியான தகவல்கள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்தப் பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வுகாண முடியாது என்றும், ஐ.நா. போன்ற பொது அவையில் பேச்சு நடத்துவது முலம் மட்டுமே தீர்வுகாண முடியும் என்றும் கூறியுள்ளது.
"சம்பந்தப்பட்ட பகுதியில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் போர் நடவடிக்கைகள் பற்றியோ, தாக்குதல் எச்சரிக்கை பற்றியோ பேசுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
மேற்கு ஆசியாவுடன் இணைந்த பிரச்சனைகள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான சிக்கலான அரசியல் பிரச்சனைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வுகாண முடியாது."என்று காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச் செயலர் வீரப்ப மொய்லி கூறினார்.
இந்தியாவிற்கும் ஈரானிற்கும் இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தக, நட்புறவுகள் இருந்து வரும் நிலையில், ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிரான எந்த விதமான மிரட்டலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.