Publish Date: Sun, 13 Jul 2008 (16:30 IST)
Updated Date: Sun, 13 Jul 2008 (16:29 IST)
கட்சி முடிவிற்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு யோசனை தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து இன்று காலை கொல்கத்தா வந்த சோம்நாத் சாட்டர்ஜி ஜோதிபாசுவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 50 நிமிடங்கள் நீடித்தது.
மத்திய அரசிற்கு இடதுசாரிகள் அளித்து வந்த ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளதையடுத்து, பதவியை விட்டு விலகுமாறு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு இடதுசாரித் தலைவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இச்சந்திப்பில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்க சோம்நாத் சாட்டர்ஜி மறுத்து விட்டார்.
பத்திரிகைகளுக்குத் தெரிவிக்க ஒன்றுமில்லை என்று ஜோதிபாசுவின் உதவியாளர் கூறினார்.
Webdunia
Publish Date: Sun, 13 Jul 2008 (16:30 IST)
Updated Date: Sun, 13 Jul 2008 (16:29 IST)