Publish Date: Wed, 09 Jul 2008 (17:49 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (17:49 IST)
மக்களவையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றிபெறும் என்றும், முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
"எங்களுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மக்களவைத் தேர்தல் வழக்கம்போல, அதாவது ஏப்ரல் அல்லது மே 2009- இல் நடக்கும்" என்றார் அவர்.
இடதுசாரிக் கட்சிகள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தாலும் குறைந்தபட்சப் பொது செயல் திட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் சிதம்பரம் கூறினார்.
இதேபோல மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத்தும், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.