Publish Date: Thu, 03 Jul 2008 (12:58 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (12:56 IST)
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வணங்க இன்று மேலும் 2,081 யாத்ரிகர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர். இவர்கள் பதினைந்தாவது குழுவினர் ஆவர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 387 பெண்கள் மற்றும் 46 குழந்தைகள் உள்பட இந்த 2,081 யாத்ரிகர்களும் பல வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கிப் புறப்பட்டனர்.
பதினைந்தாவது குழுவாகப் புறப்பட்டுச் சென்றுள்ள இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 36,363 யாத்ரிகர்கள் பகவதி நகர் முகாமில் இருந்து புனித அமர்நாத் சென்றுள்ளனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.
கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி துவங்கிய யாத்திரைப் பயணம் மோசமான வானிலை மற்றும் நெரிசல் காரணமாக 20, 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Webdunia
Publish Date: Thu, 03 Jul 2008 (12:58 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (12:56 IST)