Publish Date: Thu, 03 Jul 2008 (11:02 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (10:55 IST)
லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் நேற்று லாரி அதிபர்கள் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் வேலை நிறுத்த போராட்டத்தை நீடிக்க லாரி அதிபர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளது.
லாரி வாடகையில் சேவை வரி வசூலிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், சாதாரண டீசல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி அதிபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. எனவே காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் லாரி அதிபர்கள் சங்க நிர்வாகிகளுடன் மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் வேலை நிறுத்தத்தை நீடிக்க லாரி அதிபர்கள் முடிவு செய்து உள்ளனர்.
இந்த தகவலை கூறிய அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சரண்சிங் லோகரா, லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.
நாங்கள் தொழிலை நஷ்டத்தில் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இதுபற்றி கூறியதற்கு, நஷ்டத்தில் நடத்துவதாக இருந்தால் தொழிலை நிறுத்தி விடுங்களேன் என்று அமைச்சர் கூறினார். இதனால் நாங்கள் எங்கள் தொழிலை நிறுத்தி விட்டு வேலை நிறுத்தத்தை நீடிக்கிறோம் என்று சரண்சிங் கூறினார்.
Webdunia
Publish Date: Thu, 03 Jul 2008 (11:02 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (10:55 IST)