Publish Date: Wed, 02 Jul 2008 (13:39 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (13:39 IST)
பீகாரில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொகுதியில் உள்ள ரயில் பாதையை மாவோயிஸ்ட்டுகள் தகர்த்ததால், புது டெல்லி- கெளகாத்தி இடையிலான ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அமைச்சர் லாலு பிரசாத்தின் சொந்தத் தொகுதியான சப்ராவில் உள்ள படகோபால்- அவதார் நகர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையை, இன்று காலை 6.30 மணியளவில் மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் பாதையை தகர்ப்பதற்காக மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் பயன்படுத்திய வெடிகுண்டு ஒன்றும் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் பின்னர் அதனைப் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்தனர்.
நக்சலைட்டுகள் தாக்குதலால் முஷாஃபர்பூர்- டெல்லி, தர்பங்கா- டெல்லி, புது டெல்லி- கெளகாத்தி, கோரக்பூர்- முஷாஃபர்பூர் விரைவு ரயில்கள் வழியில் வெவ்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
ரயில் பாதை சீரமைக்கப்பட்டதும் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.