Publish Date: Tue, 01 Jul 2008 (20:30 IST)
Updated Date: Tue, 01 Jul 2008 (20:30 IST)
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசியல் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து விவாதித்துள்ளார்.
சுமார் 50 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கத் திட்டமிட்டுள்ள, அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள ஜி-8 மாநாடு பற்றியும், உள்நாடு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அணு சக்தி உடன்பாடு பற்றிய விவாதம் எதுவும் நடந்ததாக அக்குறிப்பில் கூறப்படாவிட்டாலும், விவாதத்தில் அணு சக்தி உடன்பாடு இடம்பெற்றிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.