Publish Date: Mon, 23 Jun 2008 (17:26 IST)
Updated Date: Mon, 23 Jun 2008 (17:26 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டு விவகாரத்தினால் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் ஜப்பான் பயணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு மற்றும் ராணுவத் தளவாட உற்பத்தியில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் வருகிற 28 ஆம் தேதி முதல் 5 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அமைச்சர் ஏ.கே.அந்தோணி திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், அணுசக்தி உடன்பாடு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை ஏ.கே.அந்தோணி மேற்கொள்ள உள்ளதால் இப்பயணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதென்று பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சிதான்ஷூ கர் தெரிவித்தார்.
அடுத்த பயணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.