Publish Date: Thu, 19 Jun 2008 (18:15 IST)
Updated Date: Thu, 19 Jun 2008 (18:14 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மீதான எந்தவொரு முடிவும் ஐ.மு.கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
அணுசக்தி உடன்பாடு மீதான தனது கட்சியின் நிலைப்பாடு தெளிவானது என்று குறிப்பிட்ட அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங், நமது நாட்டின் நலனிற்கு இந்த உடன்பாடு தேவை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாகவும், நாட்டில் உள்ள மின் பற்றாக்குறைக்கு இது தீர்வாக அமையும் என்றும் கூறினார்.
புது டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்" என்றதுடன், "இது காங்கிரஸ் அரசல்ல. ஐ.மு.கூட்டணி அரசு. அணுசக்தி உடன்பாட்டின் மீது நாங்கள் எந்தவொரு முடிவினை எடுத்தாலும், அதை ஐ.மு.கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் நிறைவேற்றுவோம்" என்றார்.
அணுசக்தி உடன்பாட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரிகளை விமர்சித்த திக்விஜய் சிங், அணுசக்தி உடன்பாட்டின் மீதான இடதுசாரிகளின் அதிருப்திக் கருத்துக்களை காங்கிரசால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றதுடன், இந்த விடயத்தில் இக்கணம் வரை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இடதுசாரிகளுடன் தொடர்பில் உள்ளார் என்றார்.
அரசை இடதுசாரிகள் பிளாக் மெயில் செய்கிறார்களா என்று கேட்டதற்கு, "இன்றைய உலகில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்பதை அவர்கள் (இடது) புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் நலனிற்குத் தேவையானதைத்தான் நாங்கள் நிச்சயம் செய்வோம்" என்றார்.
தனது வாதத்தை சீனா ஆதரிக்கிறது என்று குறிப்பிட்ட திக்விஜய் சிங், "அந்தக் கம்யூனிஸ்ட் நாடு, தான் அணுமின் நிலையம் அமைப்பதற்காக அமெரிக்காவுடன் உடன்பாடு மேற்கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
மேலும், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் மூலம், நாம் அணு எரிபொருள் வினியோகத்தை உறுதியாகப் பெற முடியும். இதை யாரும் தடுக்க முடியாது என்றார் அவர்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மீதான தங்கள் எதிர்ப்புக்குரலை இடதுசாரிகள் அதிகரித்துள்ள நிலையில் காங்கிரஸ் இப்படிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Thu, 19 Jun 2008 (18:15 IST)
Updated Date: Thu, 19 Jun 2008 (18:14 IST)