Publish Date: Fri, 13 Jun 2008 (17:36 IST)
Updated Date: Fri, 13 Jun 2008 (17:35 IST)
உலக வர்த்தக அமைப்பிற்காக,தோஹாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத வகையில், இந்தியா திரைக்கு பின் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாற்றியதை இந்தியா மறுத்துள்ளது.
தோஹா பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டுவதற்கு கூறப்படும் எல்லா ஆலோசனைகளையும், மற்ற வளரும் நாடுகள் ஏற்றுக் கொள்ள விடாமல், இந்தியா எதிர்த்து வருகிறது. தோஹாவில் உடன்பாடு ஏற்படும் சூழ்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பினால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என்று அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக இணை அமைச்சர் கிறிஸ்டோபர் ஏ.பாடிலா குற்றம் திங்கட்கிழமையன்று சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகம் அமைச்சர் கமல்நாத் அமெரிக்காவில் உள்ள இந்திய வர்த்தக சபையின் 33 வது ஆண்டு விழாவை ஒட்டி சார்லி ரோஸ்வுடனான தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது, எங்களை பொருத்தவரை, தோஹா பேச்சுவார்த்தை, அமெரிக்காவுக்கோ அல்லது மற்ற எந்த நாட்டிற்கும் எவ்வளவு முக்கியமோ, அது போல் எங்களுக்கும் முக்கியம். இந்தியாவின் மீதான விமர்சனம் நியாயமற்றது, தவறானது என்று கூறினார்.
அமெரிக்க வர்த்தக சபையில் வர்த்தகம், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இடையே பேசுகையில் கமல்நாத், தோஹா பேச்சுவார்த்தையில் கடந்த இரண்டு வருடங்களில் அதிக அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே மேலும் முன்னேடுத்துச் செல்வோம். தோஹா பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார்.
ஏழை நாடுகளின் விவசாயிகள் போட்டியிடும் வகையில், அமெரிக்கா அதன் விவசாயிகளுக்கு கொடுத்து வரும் மானியத்தை குறைக்க வேண்டும் என்று இந்தியாவும் மற்ற வளரும் நாடுகளும் வலியுறுத்தி வருவதை குறிப்பிட்டு பேசுகையில், “ இந்த பேச்சுவார்த்தையில் ஒருவரின் கவலையை மற்றவர்கள் மதிக்க வேண்டும். மிக முக்கியமான இந்த விடயத்தில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு அதிகபட்ச பயன் அடைய வேண்டும். ஒரு நாட்டிற்கே எல்லா பலன்களும் கிடைக்க கூடாது. அதே போல் எந்த நாடும் இழப்புகளை சந்திக்க கூடாது என்று விரும்புகின்றோம்'' என்று கூறினார்.
வாஷிங்டனில் கமல் நாத் தோஹா பேச்சுவார்த்தை குறித்து, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி சுசன் சி.ஸ்குவாப்பை சந்தித்து பேசினார்.
Webdunia
Publish Date: Fri, 13 Jun 2008 (17:36 IST)
Updated Date: Fri, 13 Jun 2008 (17:35 IST)