Publish Date: Fri, 06 Jun 2008 (15:31 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:44 IST)
மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டு செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அயல்நாட்டுப் பயணத்தை ரத்து செய்தார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வினால் மத்திய அரசிற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், செலவுகளைக் குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிக்குமாறு அமைச்சர்களுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் தனித்தனியாகக் கடிதம் எழுதினார்.
பிரதமரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு, 9 முதல் 12ஆம் தேதி வரை தான் மேற்கொள்ளவிருந்த ஃபின்லாந்து சுற்றுப் பயணத்தை ரத்து செய்தார்.
இப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் போக்குவரத்துத் துறையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.