Publish Date: Wed, 04 Jun 2008 (21:50 IST)
Updated Date: Wed, 04 Jun 2008 (21:50 IST)
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு விரும்பத்தக்கதல்ல என்றாலும், தடையற்ற எரிபொருள் வினியோகத்தை உறுதிசெய்ய இது தவிர்க்க முடியாதது என்று பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்துள்ளார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ள உரை வருமாறு:
உலகளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்று இந்தியா. நம்முடைய எரிபொருள் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி நிறைவு செய்கிறது. மாறிவரும் சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டிய தேவை நமக்கு உள்ளது.
அதிகரிக்கும் இறக்குமதிச் செலவுகள் நுகர்வோரைப் பாதிக்காமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ஒரு எல்லை உள்ளது. நமது எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து இழப்பைச் சந்திக்க முடியாது. இது தொடர்ந்தால் அயல்நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அந்நிறுவனங்களிடம் பணம் இருக்காது.
நாங்கள் இன்று அறிவித்துள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுகள் விரும்பத்தக்கதல்ல என்பதை நான் அறிவேன். இருந்தாலும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரை உயர்ந்துள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு மிகவும் குறைவானவைதான்.
பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை நீக்கியதன் மூலம் மத்திய அரசு ரூ.22,660 கோடி வருவாய் இழப்பை ஏற்றுக்கொண்டு உள்ளது. மாநில அரசுகளும் தங்களால் இயன்ற அளவு பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள், தீர்வைகளைக் குறைக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள சுமையில், மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள், நுகர்வோர் பங்கெடுத்துள்ளனர். இதனால் மாநில அரசுகளும், பெட்ரோலியப் பொருட்களின் மீது அவர்கள் விதித்துள்ள வரிகளையும், கட்டணங்களையும் குறைத்து சுமையில் பங்கேற்க வேண்டும்.
எண்ணெய் நிறுவனங்களின் மீது கூடுதல் சுமைகளைச் சுமத்துவதால், நமது சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படும். நமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
நிலையில்லாத சந்தையையும், உறுதியற்ற இறக்குமதியையும் நம்பியிருக்கும் நிலையைத் தவிர்க்க, அணுசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பெருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் கூறினார்.