Publish Date: Mon, 02 Jun 2008 (20:31 IST)
Updated Date: Mon, 02 Jun 2008 (20:31 IST)
குஜ்ஜார்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விடயத்தில் ராஜஸ்தான் மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்தியச் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.
குறிப்பிட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு தேவைப்பட்டால் அதுபற்றிய முடிவை சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் எடுக்க வேண்டும் என்றும்௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.
குஜ்ஜார்கள் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்தில், குறிப்பிட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, அதுபற்றிய முடிவை சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
குறிப்பிட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீட்டுப் பலன்களைத் தர வேண்டும் என்று விரும்பும் மாநில அரசு, பலன்களைப் பெறுவதற்கு அந்தச் சாதியினருக்கு உள்ள நியாயங்களை தகவல் அடிப்படையில் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள சட்ட அமைச்சகம், அதற்கு உதாரணமாக மராட்டியப் பழங்குடியினர் விவகாரத்தைக் காட்டியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் 16(1) ன் கீழ் மராட்டியத்தில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டுப் பலன்களை வழங்குவதற்கு அம்மாநில அரசின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை சட்ட அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குஜ்ஜார்களுக்கு 4- 6 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே எழுதிய கடிதம் குறித்து பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதன் பேரில் சட்ட அமைச்சகம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Mon, 02 Jun 2008 (20:31 IST)
Updated Date: Mon, 02 Jun 2008 (20:31 IST)