Publish Date: Tue, 27 May 2008 (12:26 IST)
Updated Date: Tue, 27 May 2008 (12:26 IST)
பழங்குடியினர் பிரிவில் தங்கள் இனத்தை சேர்க்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் இனத்தின் தலைவர் கிரோரி பைன்சாலாவிற்கு நீதிமன்ற அவமதிப்பு தாக்கீதை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது.
குஜ்ஜார் இனத்தலைவர் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படக்கூடாது என்று 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது இந்த உத்தரவை இவர் மீறியதாகக் கோரி நீதிமன்ற அவமதிப்பிற்கான தாக்கீதை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது.
மேலும் குஜ்ஜார் இனத்தின் இந்த போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு சீர் குலைவதை தடுக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விளக்கம் கேட்டு ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.