Publish Date: Wed, 21 May 2008 (19:10 IST)
Updated Date: Wed, 21 May 2008 (19:09 IST)
பெங்களூரு: கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலில் இறுதிக் கட்டமாக 8 மாவட்டங்களில் பரவியுள்ள 69 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த மூன்றாம் கட்டத் தேர்தலில் மொத்தம் 699 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் தலைவிதியை சுமார் 1.17 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
கர்நாடகச் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த 10 ஆம் தேதி 89 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக 16 ஆம் தேதி 66 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 12,389 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4,358 மிகவும் பதற்றமானவை என்றும், 4,038 பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் என்.தரம்சிங், கர்நாடக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.