Publish Date: Wed, 21 May 2008 (10:34 IST)
Updated Date: Wed, 21 May 2008 (10:33 IST)
தமிழகம், கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நரசாபூர், தேக்கல் ஆகிய கிராமங்களில் விஷ சாராயம் குறித்த தொழிலாளர்கள் பலியான தகவல் முதலில் வெளியானது. இதைத் தொடர்ந்து பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, தமிழக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில் உள்ள பின்னமங்கலம், தேவகானஹள்ளி ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் பலர் கள்ளச் சாராயம் குடித்து பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரத்தொடங்கியது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களிலும் பலர் பலியாகி வருகின்றனர். சோகத்தில் மூழ்கியுள்ள அந்த பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் அழுகுரல் கேட்ட வண்ணம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வரை கோலார் மாவட்டம் நரசாபூர், தேக்கல், பெங்களூர் நகருக்குள் இருக்கும் மிகவும் நலிந்துபோன கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் டி.ஜே.ஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பின்னமங்கலம், தேவகானஹள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் மொத்தம் 81 பேர் பலியானார்கள்.
கர்நாடக மாநிலத்தில் நேற்று மட்டும் 51 பேர் இறந்ததால், கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகம், தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களில் மேலும் 15 பேர் பலியானதால், கள்ளச்சாராய சாவு 45 ஆக அதிகரித்தது. இதுவரை கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் மொத்தம் 147 பேர் உயிர் பலியாகி உள்ளனர்.