Publish Date: Sat, 17 May 2008 (20:56 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)
பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிராக 25 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் இயக்கம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூரில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற விஷ்வ இந்துப் பரிஷத் அமைப்பின் செயலர் பிரவீன் பாய் தொகாடியா பேசியதாவது:
நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக புனிதப் போர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி வருகிறார்கள். மனிதர்களை கொலை செய்வதுதான் புனிதமா?
பயங்கரவாதிகள் புனிதப் போர் என்ற பெயரில் படுகொலைகளை நடத்தி கொண்டிருப்பதை விஷ்வ இந்து பரிஷத் இனி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
நம் நாட்டில் அயல்நாட்டு பயங்கரவாதிகள் அவ்வளவு எளிதாக இங்கு புனிதப்போர் நடத்தி விட முடியாது. இங்குள்ள சில துரோகிகள் உதவி செய்வதால்தான் அவர்களால் எளிதில் குண்டு வைக்க முடிகிறது.
அந்த துரோகிகள் யார் என்பதை கண்டுபிடித்து அழிக்க வேண்டும். இல்லையென்றால் நாடு கடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியர்கள் நிம்மதியாக வாழ முடியும்.
பயங்கரவாதிகளின் புனிதப் போருக்கு எதிராக விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நாடு முழுவதிலும் 25-ந்தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.