Publish Date: Sat, 17 May 2008 (13:35 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)
கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கோமாவை அடைந்தார்.
தற்போது 92 வயதாகும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 6 ஆம் தேதி நொய்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சுயநினைவை இழந்ததாக சுர்ஜித்திற்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் புருஷோத்தம் லால் தெரிவித்தார்.
"சுர்ஜித்தின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது முக்கிய உறுப்புகள் இன்னும் இயங்குகின்றன. மூளைச் செயல்பாடும் நன்றாகவே உள்ளது. ஆனால் அவர் சுயநினைவை இழந்துவிட்டார்." என்றார் அவர்.
முன்னதாக, கோவையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய அரசியல் தலைமைக் குழுவில் சுர்ஜித் அவரது உடல்நிலை கருதி சேர்க்கப்படவில்லை.
அதே நேரத்தில் கட்சியின் புதிய மத்தியக் குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.