Publish Date: Wed, 07 May 2008 (13:37 IST)
Updated Date: Wed, 07 May 2008 (13:36 IST)
கடந்த சில தினங்களாக கொளுத்தி வரும் வெயிலுக்கு நாடு முழுதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். நேற்று ஆந்திரா, ஒரிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் வெயிலுக்கு மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 3 நாட்களில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் வெயிலுக்கு 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸாக இருந்து வருகிறது என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் 45 டிகிரி வெயில் கொளுத்தும் ஒரிசா மாநிலத்தில் மேலும் இருவர் பலியாகியதன் மூலம் கடந்த சில தினங்களில் சாவு எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் அடித்து வரும் கடும் வெயிலுக்கு இது வரை உத்திரப்பிரதேசத்தில் 11 பேரும், மேற்கு வங்கத்தில் 10 பேரும், ஜார்கண்டில் 7 பேரும், குஜராத்தில் 3 பேரும், பஞ்சாபில் இரண்டு பேரும் ராஜஸ்தானில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் பொதுவாக வெப்ப நிலை 43 டிகிரி செல்சியஸிற்கு மேல்தான் இருந்து வருகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.