Publish Date: Thu, 01 May 2008 (12:36 IST)
Updated Date: Thu, 01 May 2008 (12:36 IST)
மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் முக்கியக் கூட்டாளியான வெங்கட் ரெட்டியை ஹைதராபாத்தில் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளனர். இதில் முக்கியமானவன் வெங்கட் ரெட்டி. இவன் கடந்த 2004 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.
அண்மையில் விடுதலை செய்யப்பட்ட வெங்கட் ரெட்டி மீண்டும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில், நேற்றிரவு ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கட் ரெட்டி தகராறு செய்துவருவதாகக் காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவ்விடத்தைச் சுற்றிவளைத்த காவலர்கள் வெங்கட் ரெட்டியைச் சரணடைந்து விடுமாறு எச்சரித்தனர். அதைக் கேட்காத வெங்கட் ரெட்டியும் அவனது கூட்டாளிகளும் காவலர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்குக் காவலர்களும் சுட்டனர்.
இம்மோதலில் வெங்கட் ரெட்டி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டான். அவனுடைய மற்ற கூட்டாளிகள் குண்டுக் காயத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.