Publish Date: Tue, 29 Apr 2008 (10:22 IST)
Updated Date: Tue, 29 Apr 2008 (10:21 IST)
''மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் அடுத்த 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்'' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் `சந்திரயான்' திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பொறுப்பு இஸ்ரோவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சந்திரயான் திட்டப் பணிகளை நாளையே (இன்று) தொடங்குகிறோம். இந்த திட்டத்துக்கும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்படும்.
அதற்காக, சில மாறுதல்கள் செய்யப்பட்டு `பி.எஸ்.எல்.வி.- எக்ஸ்.எல்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட் மூலமாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி வைக்கப்படும். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த திட்டம் நிறைவடையும். சந்திரனில் உள்ள கனிம வளம் உள்ளிட்ட விபரங்களை அந்த விண்கலம் படம் பிடித்து அனுப்பும். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் அடுத்த 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா ராக்கெட்டுகளை 3 முறை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக சோதனை நடத்தப்படும்.
விண்ணுக்கு அனுப்பப்படும் மனிதனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்த பிறகுதான் மனிதன் விண்வெளிக்கு அனுப்பப்படுவான். இந்த திட்டத்திற்கு, முதற்கட்டமாக ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு அனுமதி, இன்னும் 6 மாதத்திற்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மாதவன் நாயர் கூறினார்.
Webdunia
Publish Date: Tue, 29 Apr 2008 (10:22 IST)
Updated Date: Tue, 29 Apr 2008 (10:21 IST)