Publish Date: Fri, 18 Apr 2008 (13:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
பாலின அடிப்படையில் பாகுபாடு செய்ததாகவும், பணிக்காலத்தில் தன்னை துன்புறுத்தியதாகவும் முன்னாள் கோககோலா பெண் ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
பயால் சாவ்லா சிங் என்ற பெண் ஊழியர் கோககோலா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்தில் பணியாற்றிய காலங்களில் குறிப்பாக கர்ப்ப காலத்தில் மூத்த அதிகாரிகள் இவரை துன்புறுத்தியதாகவும், அவருடைய பணித் திறனை வேண்டுமென்றே குறைத்து இழிவு படுத்தியதாகவும் இதன் மூலம் வேலையை விட்டே செல்லுமாறு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் வேறு நிறுவனத்தில் பணியாற்றியபோதும் தொடர்ந்து தொந்தரவுகளை அளித்ததால் அந்த வேலையிலிருந்தும் பாயல் சாவ்லா சிங் ராஜினாமா செய்ய நேர்ந்துள்ளது.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் இழப்பீடு கோரியும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியும் இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அகர்வால் தலைமையிலான நீதிக் குழு முன் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து கோககோலா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.