Publish Date: Tue, 15 Apr 2008 (17:07 IST)
Updated Date: Tue, 15 Apr 2008 (17:01 IST)
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்விக் கூடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள வருவாய் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது!
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமானது என்று ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள முன்னேறிய பிரிவினரை நீக்குவதற்கு வருவாய் வரம்பை நிர்ணயித்தது.
அதன்படி, ஆண்டிற்கு 2.5 லட்சம் வருவாய் பெறும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் இந்த இடஒதுக்கீட்டு உரிமையை பெறுவது தடுக்கப்படுகிறது என்றும், தற்பொழுது 6வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த வருவாய் வரம்பை உயர்த்த வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையிலான தி.மு.க. உயர்மட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.