மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் மேற்கு வங்காளப் போக்குவரத்து அமைச்சர் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாக கூறியதன் மூலம் தான் கட்சி விதிமுறையை மீறி விட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு கூறியுள்ளார்.
கோவையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டில், அக்கட்சியின் மத்தியக் குழு தேர்வு செய்யப்பட்டது. அப்போது அக்குழுவில் மேற்குவங்கப் போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்கரவர்த்தி இடம்பெற வேண்டும் என்று ஜோதிபாசு வெளிப்படையாகத் தெரிவித்தார்.
சர்ச்சையைக் கிளப்பிய இவ்விவகாரம் குறித்து இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிபாசு, "சுபாஷ் பற்றிய எனது விருப்பத்தை வெளிப்படையாக கூறியிருக்கக் கூடாது. கட்சிக்குள் பேச வேண்டிய விடயத்தை வெளியில் பேசியதன் மூலம் கட்சி விதிமுறையை நான் மீறி விட்டேன்" என்றார்.