Publish Date: Tue, 08 Apr 2008 (10:07 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (10:06 IST)
''ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது தேவை இல்லாத ஒன்று. உடனடியாக திட்டத்தை செயல்படுத்தி 2 மாவட்ட மக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்'' என்று கர்நாடக முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் நஞ்சேகவுடா கூறியுள்ளார்.
இது குறித்து கர்நாடக முன்னாள் நீர்ப்பாசன மந்திரி நஞ்சே கவுடா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
1998ஆம் ஆண்டு ஒகேனக்கல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்பு மத்திய அரசு 2 மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போது கர்நாடக அரசு சார்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது?
உண்மை என்னவென்றால் போராட்டம் நடத்துபவர்கள் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. இரண்டு மாநிலங்களுக்கு இடையேயோ, நாடுகளுக்கு இடையேயோ ஒரு ஆறு எல்லையாக செல்லும் போது, ஆற்றின் நடுப்பகுதியில் ஒரு கோடு போட்டு எல்லை பிரிப்பது சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட முறையாகும்.
அது மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நடைமுறை ஆற்று நீரை பயன்படுத்தும் போது முதலில் முக்கியத்துவம் கொடுப்பது குடிநீருக்குத்தான். அடுத்து நீர்ப்பாசனத்துக்கு அதன்பிறகு மின் உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்துவார்கள். ஒகேனக்கல் திட்டத்தை பொறுத்த அளவில் அது முழுக்க முழுக்க குடி நீர் திட்டம் ஆகும். அது மட்டுமல்ல இப்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படுவது நமது மாநிலத்தில் அல்ல. எனவே போராட்டத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
குடிநீர் திட்டத்துடன் சேர்த்து மின் திட்டத்தையும் நிறைவேற்ற போவதாக கூறப்படுகிறதே?
1998ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி குடிநீருக்காகத்தானே தவிர மின்சாரத்துக்காக அல்ல. எனவே தமிழகம் மின் திட்டத்துக்கான அணை கட்ட முடியாது. அப்படி அவர்கள் கட்ட நினைத்தால் கர்நாடகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இது வரை எந்த கடிதமும் அப்படி வரவில்லை. அப்படி ஏதாவது நடந்தால் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
அப்படியானால் இப்போது நடக்கும் நாடகங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
போராட்டம் நடத்துபவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக கோஷம் எழுப்புகிறார்கள். இந்த பிரச்சினையில் தண்ணீர் பங்கீட்டு பிரச்சினை என்பதே இல்லை. அப்படியே பிரச்சினை இருந்தாலும் 700 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு யாருக்கு என்பது பற்றிய பிரச்சினைதான் உள்ளது. ஆனால் யாரும் அது பற்றி பேசவில்லை.
இந்த திட்டத்தை ஒரு மாதம் ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறதே?
10 வருடங்களாக கிடப்பில் போட்டு இருக்கிறார்களே இந்த ஒரு மாதத்தில் என்ன இருக்கிறது. உடனடியாக திட்டத்தை செயல்படுத்தி 2 மாவட்ட மக்களுக்கும் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும்.
இதில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு இந்த திட்டத்தின் உண்மை நிலவரம் குறித்து மக்களுக்கு விளக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்.
போராட்டக்காரர்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
போராட்டக்காரர்கள் பற்றி சொல்வது எல்லாம் தவறாக வழிகாட்டுபவர்களால் வழிதவறி போய்விடாதீர்கள்? எந்த அரசியல் அமைப்புக்காகவும் வன்முறையில் இறங்காதீர்கள். நாம் சகோதரர்கள். சகோதரர்கள் போல நடந்து கொள்வோம் என்று நஞ்சே கவுடா கூறினார்.
Webdunia
Publish Date: Tue, 08 Apr 2008 (10:07 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (10:06 IST)