Newsworld News National 0804 05 1080405003_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூர் தமிழர்கள் தேர்தலை புறக்கணிப்பார்களா? நாளை முடிவு!

Advertiesment
கர்நாடகா தமிழர்கள் பெங்களூரு பெங்களூரு தமிழ்ச்சங்கம்
, சனி, 5 ஏப்ரல் 2008 (10:01 IST)
கர்நாடகத்தில் தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் வகையில் செயல்படுவதை கண்டித்து பெங்களூரில் உள்ள சுமார் 30 லட்சம் தமிழர்கள் தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இது பற்றிய முக்கிய முடிவு எடுக்க ஆலோசனை கூட்டம் நாளை (6ஆ‌ம் தேதி) பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடக்கிறது.

இது பற்றி பெங்களூரு தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

கர்நாடகத்தில் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மே 10, 16, 22 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. கர்நாடகத்தில் தமிழர்களின் மீது 1970-களில் வெறுப்புக்கு வித்திடப்பட்டு, 1991 காவிரி கலவரத்தின் போது கூர்மையடைந்து அந்த உணர்ச்சி வெறி உணர்ச்சியாக மாறி உள்ளது.

மொழிச்சிறுபான்மையினரின் உரிமையை பாதிக்கும் வகையில் கோகாக் அறிக்கை, சரோஜினி மகிஷி அறிக்கை எனப்பல வகையான பாதிப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. தாய் மொழி கல்விக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழை ஒரு பாடமாக நடத்தி வந்த பள்ளிகளில் தமிழ் பாடத்தை நீக்கி வருகிறார்கள்.

த‌மிழ‌ர்க‌ள் மே‌ல் வெறு‌ப்புண‌ர்‌ச்‌சி தொட‌ர்கிறது!

தமிழாசிரியர்கள் ஓய்வு பெறும் போது மீண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. மானியம் அளிக்கப்படும் பள்ளிகளில் ஆசிரியர் ஓய்வு பெற்றால் மீண்டும் நியமிப்பதில்லை. அதற்கான மானியமும் கொடுப்பது இல்லை. தொழிற்சாலையிலும் அரசுப்பணிகளிலும் தமிழர்கள் என்றால் உரிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் தமிழர்கள் என்று கூறினால் பதிவு செய்வதில்லை.

1991-ம் ஆண்டு காவிரி கலவரத்துக்கு பிறகு தமிழர் எதிர்ப்பு பல்கி பெருகி நம் வாழ்வியலையே குறிவைத்து தாக்கிடும் அளவுக்கு வளர்ந்து உள்ளது. ராஜ்குமார் கடத்தல், நாகப்பா கடத்தல், ராஜ்குமார் மறைவு என்ற நிகழ்வுகளின் போதும் ஆண்டு தோறும் நிகழும் கன்னட ராஜ்யோத்சவா என்ற கர்நாடக மாநிலம் தொடங்கப்பட்டதன் நினைவுவிழாவின் போதும் கன்னட அமைப்பினர் தமிழர்களின் மேல் தங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்துவது தடுக்கப்பட்டு தமிழ் கிறிஸ்துவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

பாதுகா‌ப்பு இ‌ல்லாத ச‌ட்ட‌ம்!

இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு குறிப்பிட்ட அமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழகத்துக்கான சாலை ரெயில் போக்குவரத்துகளை தடுப்போம், தமிழ் திரைப்படங்களை திரையிட மாட்டோம், தொலைக்காட்சிகளில் தமிழ் ஒளிபரப்பை தடுத்து நிறுத்துவோம், தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நடத்த விடமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்கள்.

பெங்களூர் தமிழ்ச்சங்கம் தாக்கப்பட்டது, தமிழ் நாளிதழ்கள் எரிக்கப்பட்டன. பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது. பத்திரிகை வெளியிடக்கூடாது என்று மிரட்டப்பட்டது. பெரிய பெரிய அமைப்புகளையே தாக்கும் அளவுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் சட்டம் ஒழுங்கு கர்நாடகத்தில் நிலவுகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளும் தமிழர்கள் உடமைகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து பெருகி வருகிறது.

தேர்தல் புறக்கணிப்பா?

இந்த நிலையில் தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் குடிமை உரிமைகளும், மனித உரிமைகளும் காப்பாற்றப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே தேர்தல் வரும் நேரத்தில் இதை பயன்படுத்தி தமிழர்கள் உறுதியான முடிவை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது பற்றி விவாதிக்க தமிழ்ச்சங்கத்தில் வருகிற நாளை (6ஆ‌ம் தே‌தி) ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil