Publish Date: Thu, 03 Apr 2008 (10:00 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (11:35 IST)
''நாங்கள் தி.மு.க.வுடன் சுமூக உறவு கொண்டுள்ளோம். ஆனால் தி.மு.க. தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு முன்னணியில் நாங்கள் இடம் பெறவில்லை. இருந்தபோதிலும் தி.மு.க.வுடன் எங்கள் உறவு தொடரும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.
கோவையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 4-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கூறுகையில், "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. அக்கட்சி தலைமையிலான அணியிலும் இடம்பெற மாட்டோம். பாரதிய ஜனதா கட்சியை தனிமைப்படுத்தி, அதனுடன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சேராமல் தடுப்போம். மேலும் மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் கட்சிகளோடு உறவுகளை வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.
"மத்தியில் 3-வது அணி அமைக்க பிராந்திய கட்சிகளுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் பேசி வருகிறோம். நாங்கள் தி.மு.க. வுடன் சுமூக உறவு கொண்டுள்ளோம். ஆனால் தி.மு.க. தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு முன்னணியில் நாங்கள் இடம் பெறவில்லை. இருந்தபோதிலும் தி.மு.க.வுடன் எங்கள் உறவு தொடரும்" என்றார் அவர்.
"விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அவை திருப்திகரமாக இல்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறினால் அதை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்துவது உறுதி" என்று ராமச்சந்திரன் பிள்ளை கூறினார்.
Webdunia
Publish Date: Thu, 03 Apr 2008 (10:00 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (11:35 IST)