Publish Date: Sat, 29 Mar 2008 (16:05 IST)
Updated Date: Sat, 29 Mar 2008 (16:02 IST)
கோவையில் இன்று துவங்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு ஆகியோர் பங்கேற்கவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்றில் இந்த இரு தலைவர்களும் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்காதது இதுவே முதல் முறையாகும்.
உடல்நலக் குறைவு, முதுமை, நீண்டதூரப் பயணம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டே இந்த இரு தலைவர்களும் மநாட்டில் பங்கேற்கவில்லை என்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் நடக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இம்மாநாட்டில் 24 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 722 பிரதிநிதிகள் மற்றும் 70 மதிப்பீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.