Publish Date: Thu, 27 Mar 2008 (17:04 IST)
Updated Date: Thu, 27 Mar 2008 (17:03 IST)
சிறிலங்கா அரசு பிற நாடுகளிடம் ஆயுதங்களைப் பெறுவதன் மூலம் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த விமானப்படைத் தளபதி பி.சி.லாலின் 25 ஆம் ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பேசிய எம்.கே.நாராயணன், சிறிலங்கா விவகாரம் பற்றிக் கூறியதாவது:
சிறிலங்க அரசு, இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வை மட்டும் முன்வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்கிறது.
இதற்காக சிறிலங்க அரசு மேற்கொள்ளும் அபரிமிதமான ஆயுதக் கொள்முதல் இந்தியாவின் ராணுவ பலத்தை பாதித்துவிட ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இலங்கையில் தற்போது அமைதி முயற்சிகள் அனைத்தும் முறிந்து போகிற சூழல் நிலவுகிறது. இது மிகவும் மோசமானதாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மிகப்பெரிய சிறுபான்மைத் தமிழினமான ஈழத் தமிழர்களை, சிறிலங்க அரசு கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காண்பதை இந்தியா எதிர்ப்பதுடன் சிறுபான்மை இனத்திற்கு அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தும்படி கொழும்பை வலியுறுத்துகிறது.
இதற்காகச் சிறிலங்க அரசிற்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கலாம் என்பது குறித்தும், எவ்வளவு இராணுவ உதவிகளை வழங்கலாம் என்பது பற்றியும் இந்தியாவில் ஒரு தேசிய முடிவு எட்டப்பட வேண்டும்.
Webdunia
Publish Date: Thu, 27 Mar 2008 (17:04 IST)
Updated Date: Thu, 27 Mar 2008 (17:03 IST)