Publish Date: Wed, 26 Mar 2008 (14:51 IST)
Updated Date: Wed, 26 Mar 2008 (14:50 IST)
திபெத்தின் பல்வேறு பகுதிகளில் சீன அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்துவரும் புத்த மதத் துறவிகள் உள்ளிட்ட திபெத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சீன அரசிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் கைகளில் வைத்திருந்த அவர்கள், சீனப் பிரதமர் வென் ஜியாபோவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
திபெத்தைச் சீனாவின் பிடியில் இருந்த விடுவிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான திபெத்தியர்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் வகையில் ஐ.நா. இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுடன் பேச்சு நடத்த சீன அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், திபெத் வன்முறைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு மண்டல திபெத்தியன் இளைஞர் காங்கிரஸ், திபெத்தியன் பெண்கள் சங்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
கர்நாடக மாநிலம் முழுவதும் 60,000 திபெத் அகதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.