Publish Date: Mon, 24 Mar 2008 (19:54 IST)
Updated Date: Mon, 24 Mar 2008 (19:53 IST)
அரசுச் செயலர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள ஊதிய உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் 'மக்கள் விரோதமானது' என்று அக்கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலருமான குருதாஸ் தாஸ்குப்தா கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
செயலர்களுக்கு மிக அதிக ஊதியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏழை இந்தியாவால் இவ்வளவு அதிக ஊதியத்தை வழங்க இயலாது. மூன்றாவது, நான்காவது நிலை ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு வரவேற்கத்தக்கது.
ஓய்வு வரம்பை 62 வயதாக நிர்ணயிக்க வேண்டும். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பணி நியமனம் செய்வதையும், இந்த மேலைநாட்டு மனிதவள நியமன முறையையும் எதிர்க்கிறோம். இது அரசு பணிகளில் சேர விரும்பும் வேலையில்லா இளைஞர்களுக்கு எதிரானது என்றார் அவர்.
6-வதி ஊதியக் குழுவின் அறிக்கையை நிதி அமைச்சர் மத்திய அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ள நிலையில், அறிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.
'இந்த பரிந்துரைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் விரைவில் எழுத்துப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும்' என்றும் குப்தா கூறினார்.