Publish Date: Mon, 24 Mar 2008 (16:19 IST)
Updated Date: Mon, 24 Mar 2008 (16:18 IST)
பெண் பத்திரிகையாளர் ஷிவானி பட்நாகர் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.சர்மா உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கின் தீர்ப்பில், ஆர்.கே.ஷர்மாவின் சிறந்த பணித் திறனைக் கருத்தில் கொண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கவில்லை என்று நீதிபதி ராஜேந்திர குமார் சாஸ்திரி குறிப்பிட்டார்.
மேலும், ஆர்.கே.ஷர்மாவிற்கு உடந்தையாக இருந்த சத்ய பிரகாஷ், பிரதீப் ஷர்மா, ஸ்ரீ பகவான் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஷிவானி, கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஷிவானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஷர்மா, கடந்த 2002-இல் அம்பாலா நீதிமன்றத்தில் சரணடைந்து, பின்னர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், ஆர்.கே.ஷர்மா, அவருக்கு உடந்தையாக இருந்த சத்ய பிரகாஷ், பிரதீப் ஷர்மா, ஸ்ரீ பகவான் ஆகியோர் குற்றவாளிகள் என்று கடந்த 18 ஆம் தேதியன்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.