Publish Date: Wed, 19 Mar 2008 (19:54 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (19:54 IST)
மேகாலய மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் டோங்குபார் ராய் இன்று மாலை பதவியேற்றார்.
மேகாலய சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதலமைச்சராக பொறுப்பேற்ற 10 நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லபாங் இன்று காலை பதவி விலகினார்.
அதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி (14 இடங்கள்), ஐக்கிய ஜனநாயக கட்சி (11), மக்கள் ஜனநாயக கட்சி (2) ஆகிய கட்சிகள் அடங்கிய 'மேகாலயா முற்போக்கு கூட்டணி (எம்.பி.ஏ.) பிற்பகல் புதிய அரசு அமைக்க ஆளுநரை வலியுறுத்தியது.
இக்கூட்டணியுடன் இரண்டு சுயேட்சைகளும், பா.ஜ.க., தேசிய விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றில் தலா ஒருவரும் கைகோர்த்துள்ளதால் மொத்தம் உள்ள 60 இடங்களில் 31 இடங்களை பெற்று எம்.பி.ஏ. பெரும்பான்மை பெற்றுள்ளது.
மேகாலய ஆளுநர் சித்துவும் புதிய ஆட்சி அமைக்க மேகாலயா முற்போக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். மேலும், புதிய முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சங்மா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் டோங்குபார் ராயை ஆளுநர் நியமித்தார்.
இதையடுத்து, இன்று மாலை 6.30 மணியளவில் மேகாலய புதிய முதலமைச்சராக டோங்குபார் ராய் பதவியேற்றார்.
'மேகாலயாவுக்கு ஒரு நிலையான் ஆட்சி தேவை. ஆனால், மேகாலய முற்போக்கு கூட்டணி வெகுகாலம் நீடித்திருக்காது' என்று லபாங் கூறிய கருத்துக்கு சங்மா பதிலளிக்கையில், 'லபாங் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அவர் இப்படி கூறியிருப்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனென்றால், காங்கிரஸ் பண்பாட்டின்படி தான் அவர் பேசியுள்ளார்' என்று கூறினார்.