Publish Date: Wed, 19 Mar 2008 (17:21 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (17:21 IST)
இந்திய மின் பகிர்மான நிறுவனத்திற்கு (பவர் கிரிட் கார்ப்பரேசன்) ரூ.2,400 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய மின் பகிர்மான நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால், இந்தக் கடன் தொகைக்கான உத்தரவாதத்தை மத்திய அரசு உலக வங்கியிடம் வழங்கியுள்ளது.
மின் பகிர்மானத்தில் ஏற்படும் இழப்பைக் குறைக்கும் வகையில் 4 ஆவது மின் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொருளாதார வளர்ச்சி சிறப்பானதாக இருந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மின் பற்றாக்குறையால் மட்டுப்படுத்தப்படுகிறது.
தற்போது மின் உற்பத்தி அதிகரித்திருப்பது உண்மைதான் என்றாலும், மின் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளால் ஏராளமான மின்சாரம் வீணாகிறது.
இவற்றையும், அதிகரித்து வரும் தேவையையும் கருத்தில் கொண்டு மின்சார விரயத்தைக் கட்டுப்படுத்த இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.