மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்திய சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய காவல் பணி மற்றும் பிற மத்திய அரசு பணிகளுக்கான இந்த தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு மார்ச் 31 முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்த நாள் மற்றும் நேரம் ஆகியவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தெரிவிக்கப்படும். மேலும், மார்ச் 25ஆம் தேதி முதல் இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நேர்முகத் தேர்வுகள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தோல்பூர் ஹவுஸ், ஷாஜகான் சாலை, புது தில்லி-110 069 என்ற முகவரியில் நடைபெறுகிறது. தேர்வு பெற்றவர்கள் தங்களது முகவரியில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதை உடனடியாக தேர்வாணைய அலுவலகத்திற்கு கடிதம் மூலமோ தொலைநகல் மூலமோ தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.