பருவநிலை மாற்ற பாதிப்பிற்குத் தீர்வான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக, தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் ஒரு நாடு என்ற வகையில் இந்தியா இருக்க முடியும் என்று அமெரிக்க முன்னாள் துணை அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான அல் கோர் கூறினார்.
"தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா தனது திறனை நிரூபித்துள்ளது. இதேபோல, பருவநிலை மாற்ற பாதிப்பிற்கு எதிராக போராடும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையிலும் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா விளங்க முடியும்" என்றார் அவர்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அல் கோரிடம், மாசு வாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைப் பற்றிக் கேட்டதற்கு, இந்தியாவைப் போன்ற வேகமாக வளரும் நாடுகள் எளிதாக தரக்கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்வதுடன் அவற்றைத் தங்கள் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் முடியும் என்றார்.
மேலும், பருவநிலை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் வர வேண்டியது அவசியம் என்று கூறிய கோர், நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அவர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
மாசுக்களை வெளியேற்றும் விகிதத்தை ஒப்பிடாமல், 21 ஆம் நூற்றாண்டில் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும் என்றார் அவர்.