Publish Date: Sat, 15 Mar 2008 (16:51 IST)
Updated Date: Sat, 15 Mar 2008 (16:50 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலம் 3 மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியுமான மாயாவதி கூறியுள்ளார்.
அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை, பந்தேல்காண்ட், புர்வாஞ்சல், மேற்கு உத்தரப் பிரதேசம் என மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டுள்ளார்.
கட்சி அலுவலகத்தில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராம் பிறந்த நாள் விழாவின் போது தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், இது சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தான் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரித்து சிறிய மாநிலங்கள் உருவாக்குவதில் முதலமைச்சர் மாயாவதி அரசு ஆதரவு தெரிவித்து வருவது பற்றி வெள்ளிக்கிழமையன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டதற்கு, இதுபற்றி மாநில அரசிடம் இருந்து திட்டம் அனுப்பப்படுமானால் அதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.