Publish Date: Fri, 14 Mar 2008 (17:48 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (17:47 IST)
இந்தியக் குடிமகனுக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தங்கி வாழ உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மராட்டியத்தில் உள்ள வட மாநிலத்தவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மராட்டிய நவ நிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி வருவதைக் கண்டித்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
“இந்தியா என்பது யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய நாடு. இங்கு வாழும் அனைவரும் இந்தியர்கள். அவர்களின் நாடு இந்தியா. அந்த வகையில் இந்தியர்கள் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தங்க உரிமை உள்ளது.
பிற பகுதிகளில் தங்குவது மட்டுமல்ல, அமைதியாகத் தொழில் புரியவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்று” நீதிபதி எச்.கே.சீமா, நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆகியோர் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
“சமீப காலமாக எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவது, எதிர்ப்பு தெரிவிப்பது என்ற மனோபாவம் அதிகரித்து வருகிறது. சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். சிறு விடயங்கள்கூட தங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இத்தகைய போக்கு விபரீதமானது” என்று சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், “இது நாட்டை துண்டாடும் செயல். இந்தப் பிரச்சனையை துவக்கத்திலேயே இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
மேலும், “இந்திய தேசத்தில் உள்ள அனைவரும் சமம். நாம் ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுடன், சகிப்புத் தன்மையோடு வாழ வேண்டும்” என்ற நீதிபதிகள், "பல கோடி முகங்கள் கொண்ட பாரத மாதாவுக்கு உடல் ஒன்றுதான்; பல மொழிகள் பேசினாலும் சிந்தனை ஒன்றுதான்'' என்ற பாரதியாரின் கவிதையைக் குறிப்பிட்டனர்.
Webdunia
Publish Date: Fri, 14 Mar 2008 (17:48 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (17:47 IST)