Publish Date: Fri, 14 Mar 2008 (16:44 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (16:43 IST)
திருமண நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர் குடிபோதையில் 10 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்ற நிகழ்வு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள அலிபூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 5 பேர் வந்தனர். அவர்கள் நன்றாக குடித்து விட்டு போதையில் 10 வயது சிறுவனை உயிருடன் எரித்துக்கொன்றனர்.
எரித்துக் கொல்லப்பட்ட சிறுவன் பெயர் சஞ்சீவ் என தெரியவந்துள்ளது. அவனது உடல் அலிபூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வியாழனன்று இரவு கண்டு பிடிக்கப்பட்டதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் காவல் துறையினரிடம் அளித்த புகாரை அடுத்து நடைபெற்ற விசாரணையில் மீரட்டிலிருந்து, அலிபூருக்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த வாகனம் அந்த பகுதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளான்.
அப்போது சேதம் அடைந்த மிதிவண்டிக்கு சிறுவன் பணம் கேட்டுள்ளான். அப்போது நடந்த வாக்கு வாதத்தில், ஆத்திரமடைந்த வாகனத்தில் வந்தவர்கள் சிறுவனை பலமாக தாக்கி உள்ளனர். பின்னர் அவனை அலிபூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு தொடர்பாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அந்த வாகனத்தின் இரண்டு ஓட்டுனர்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.