இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மைக்ரோ செயற்கை கோள்கள் செலுத்தப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் மக்களவையில் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு ஆய்வுக்காக ஜெர்மனியில் இருந்து ஏழு கிலோ எடையுள்ள ரூபின்-8 செயற்கைகோள், அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப செயல்முறை விளக்கத்திற்காக கனடாவில் டோரண்டோ பல்கலைக் கழகத்திலிருந்து 25 கிலோ எடையுள்ள என்எல்எஸ்-4 என்ற ஆறு செயற்கைகோள்களின் தொகுப்பு.
தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்காக கனடாவில் டோரண்டோ பல்கலைக் கழகத்திலிருந்து 14 கிலோ எடையுள்ள என்எல்எஸ்-5 செயற்கைகோள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்காக நெதர்லாந்து நாட்டில் இருந்து 6 கிலோ எடையுள்ள க்யூப்சாட் எனப்படும் மூன்று நானோ செயற்கைகோள்களின் தொகுப்பு, தொழில்நுட்ப செயல்முறை விளக்கங்களுக்காக சிங்கப்பூரில் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் இருந்து 120 கிலோ எடையுள்ள ஙீ-சாட் செயற்கைகோள் ஆகியவை செலுத்தப்பட உள்ளன.
இந்தியாவின் முக்கிய செயற்கைகோள்களுடன் இணைந்து இந்த செயற்கைகோள்கள் அனுப்பப்படுவதால் இதற்கு கூடுதல் செலவு எதுவும் இல்லை. இந்த புதிய மைக்ரோ செயற்கைகோள்கள் பல புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிக்கவும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும் உதவும். இந்திய ராக்கெட்டுகள் மூலம் இந்த மைக்ரோ செயற்கைகோள்களை செலுத்துவதால் சர்வதேச ஒத்துழைப்பு மேம்படுவதோடு சர்வதேச சந்தை மதிப்பின் அடிப்படையில் வருவாயும் கிடைக்கிறது என்று அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்தார்.