Publish Date: Tue, 11 Mar 2008 (19:37 IST)
Updated Date: Tue, 11 Mar 2008 (19:36 IST)
"மாநிலச் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களைச் சந்திக்க நாம் அனைவரும் இப்போதே தயாராக வேண்டும்" என்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
"கடந்த கால தேர்தல் படிப்பினைகளை காங்கிரஸ் நன்கு உணர்ந்துள்ளது. தேர்தலில் சீட் வழங்கும் முறையில் இனி மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவும், வேட்பாளர்களை கவனமாக தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே செல்வாக்கு இல்லாதவர்களுக்கு நிச்சயம் தேர்தலில் சீட் கிடைக்காது" என்றார் சோனியா,
மேலும், "அடுத்த சில மாதங்களில் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டு உள்ளது. இதற்குள் மக்களிடையே காங்கிரஸ் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்த்து, அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்று சுட்டிக் காட்டிய சோனியா, காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.
தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடி, உண்மையிலேயே சரித்திர சாதனை. இதையே அரசின் சாதனைகளாகக் கூறி மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என்றார் சோனியா காந்தி.
Webdunia
Publish Date: Tue, 11 Mar 2008 (19:37 IST)
Updated Date: Tue, 11 Mar 2008 (19:36 IST)