Publish Date: Fri, 07 Mar 2008 (11:44 IST)
Updated Date: Fri, 07 Mar 2008 (11:44 IST)
நமது நாட்டில் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 69.5 விழுக்காடு குழந்தைகள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 63 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களையும், 71.5 விழுக்காட்டினர் கிராமப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
"இரத்தசோகை, பன்முகத்தன்மை கொண்ட பிரச்சனையாகும். போதுமான அளவில் இரும்புச்சத்துள்ள உணவைச் சாப்பிடாதது, பயறு வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை அடங்கிய உணவை உட்கொள்ளாதது, குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து கருத்தரிப்பது, அழற்சியால் பாதிப்பு, தவறான பாலூட்டும் முறைகள் போன்ற பல்வேறு காரணங்களால் இரத்தசோகை பரவலாக காணப்படுகிறது.
இக்காரணங்களுடன், எழுத்தறிவின்மை, வறுமை, பொதுவான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி தொடர்புடைய காரணங்களாலும் நம் நாட்டு மக்களிடையே இரத்தசோகை பாதிப்பு விழுக்காடு அதிகமாக இருக்கிறது" என்று டாக்டர் அன்புமணி மேலும் தெரிவித்தார்.