Publish Date: Tue, 04 Mar 2008 (18:52 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (18:52 IST)
இந்திய ராணுவத்துடன் தங்களுக்கு உள்ள நல்லுறவு நீடிக்கும் என்று சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, புது டெல்லியில் இன்று இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய ராணுவத்துடன் எங்களுக்கு நீண்டகாலமாக நல்லுறவு உள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த உறவு சரியான திசையில் நீண்டகாலம் நீடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
முன்னதாக, இலங்கை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறிலங்கா அரசு தயாரித்துள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
மேலும், சரத் பொன்சேகா இங்கிருக்கும் காலத்தில், புலிகளின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் வகையில் சிறிலங்கா ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களையும், தளவாடங்களையும் இந்தியா கொடுத்து உதவுவது குறித்துப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Webdunia
Publish Date: Tue, 04 Mar 2008 (18:52 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (18:52 IST)